தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு
x
தினத்தந்தி 30 Oct 2021 4:38 PM GMT (Updated: 30 Oct 2021 4:38 PM GMT)

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதே நாளன்று மகாவீரர் மோட்சம் பெற்ற நாளான “மகாவீர் நிர்வான் தினம்” ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தன்று தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூடி வைக்க உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று மகாவீர் நிர்வான் தினம் வருவதால், சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டது. பொதுவாகவே தீபாவளி பண்டிகையன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்தும் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களை சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும், ஜெயின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story