வாக்காளர் பட்டியல் பணிகளில் அ.தி.மு.க.வினர் முனைப்போடு செயல்பட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்


வாக்காளர் பட்டியல் பணிகளில் அ.தி.மு.க.வினர் முனைப்போடு செயல்பட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:26 PM GMT (Updated: 3 Nov 2021 9:26 PM GMT)

வாக்காளர் பட்டியல் பணிகளில் அ.தி.மு.க.வினர் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1-1-2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது. கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் வருகிற 30-ந்தேதி வரை உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 13, 14, 27, 28-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில்...

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு மற்றும் வட்டச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டர்கள், குறிப்பாக கட்சியின் சார்பில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தனிக்கவனம் செலுத்தி, 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை செய்ய வேண்டும்.

அதேப்போல, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில், அத்துமீறல்கள் ஏதேனும் இருப்பது தெரியவந்தால், உடனுக்குடன் அதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும். கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டச்செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கட்சியின் சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து, இந்த பணியை முடித்து, அதன் விவரங்களை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story