புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்'?


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்?
x
தினத்தந்தி 9 Nov 2021 2:58 AM GMT (Updated: 9 Nov 2021 2:58 AM GMT)

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

வங்க கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10-ந் தேதி (நாளை), 11-ந் தேதியில் (நாளை மறுதினம்) சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வழக்கமாக அதி கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். அந்த வகையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையும் விடப்படும்.

அதன்படி, 10-ந் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல், 11-ந் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்'டும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்'டும் விடுக்கப்பட்டுள்ளது.

‘ரெட்' மற்றும் ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story