கனமழையால் சேதமடைந்த குடியிருப்புகளுக்கு கருணைத்தொகை வழங்குங்கள் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


கனமழையால் சேதமடைந்த குடியிருப்புகளுக்கு கருணைத்தொகை வழங்குங்கள் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:15 PM GMT (Updated: 9 Nov 2021 11:15 PM GMT)

மறுசீரமைப்பு திட்டத்தின்படி கனமழையால் சேதம் அடைந்த குடியிருப்புகளுக்கு கருணைத்தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்த கன மழை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பேரழிவு நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இடைவிடாமல் பெய்த கன மழையால், வெள்ள நீர் வடிய இடம் இன்றி சாலைகளில் சுமார் 3 அடி அளவுக்கு அதிகமாக தேங்கி இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.

இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களில் இருந்தும் உபரி நீரை அரசு வெளியேற்றி வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 9-ந்தேதி (நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணைத்தொகை

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உறுதி அளித்ததற்காக, தமிழக மக்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தவிர மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சேதமான குடிசைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்.

இதுதவிர, பொது உள்கட்டமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவே, மீட்பு, நிவாரணம் மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொள்வதற்காக தமிழகத்துக்கு நிதியை விடுவிக்குமாறு, மத்திய நிதி அமைச்சகத்துக்கு தகுந்த உத்தரவுகளை நீங்கள் பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறியை மலிவு விலையில் வழங்கவும், மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை இந்த மாத இறுதி வரை நீட்டிக்கவும், வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story