‘அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை' - ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் வாதம்


‘அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை - ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 11 Nov 2021 1:51 AM GMT (Updated: 11 Nov 2021 1:51 AM GMT)

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில், ‘அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரியும் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முடிவடைந்தது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது கூறியதாவது:-

சசிகலா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, அதனை சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்கி உள்ளது. சசிகலா அ.தி.மு.க.விலேயே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர்கள் விவரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.

இவ்வாறு வக்கீல் வாதாடினார்.

இதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story