அமைச்சர்கள், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்


அமைச்சர்கள், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 12 Nov 2021 3:01 AM GMT (Updated: 12 Nov 2021 3:01 AM GMT)

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அமைச்சர்கள், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்து, பணிகளை துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கலெக்டர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்திடவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் துறை சார்ந்த அலுவலர்கள் பயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட்டு உள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story