5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம்


5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம்
x
தினத்தந்தி 12 Nov 2021 11:53 PM GMT (Updated: 12 Nov 2021 11:53 PM GMT)

சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம் சில இடங்களில் இருக்கிறது. அங்கு மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

சென்னையில் பெய்து வந்த தொடர் மழை நின்று, மேகங்கள் வழிவிட்டு, சூரிய வெளிச்சம் தென்பட்ட நிலையிலும், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாத சோகங்கள் இருக்கின்றன. குறிப்பாக கொளத்தூரில் ஜவஹர்நகர், சிவ இளங்கோ சாலை, ஜி.கே.எம். காலனி, பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் இடுப்பளவுக்கு இருக்கிறது. இந்த பகுதிகளில் தரைத்தளத்தில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்து காணப்படுகின்றன.

இதேபோல், அசோக்நகர் 16, 17, 18 மற்றும் 19 அவென்யூ, ஈக்காட்டுத்தாங்கலில் சொர்ணாம்பிகை தெரு, அஞ்சுகம் நகர், வடபழனி ஏ.வி.எம். அவென்யூ. கே.கே.நகரில் பல இடங்கள், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் தாணாதெரு, கோடம்பாக்கம் வரதராஜபுரம், வாத்தியார் தோட்டம், எழும்பூர் சாலைமா நகர், மந்தைவெளி வி.சி.கார்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் தேங்கிய தண்ணீர் வடியாமல் அப்படியே இருக்கிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேலும் வட சென்னையில் பட்டாளம், ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர் உள்பட சில பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக பட்டாளம் பகுதியில் கடந்த 5 நாட்களாக தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி போய் இருக்கின்றனர்.

தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் இந்த மழைநீரால் தொடர்ந்து 5-வது நாளாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் தரைத்தளத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் சுகாதார வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் அகற்றும் பணிகள் தீவிரம்

இதுதவிர மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் உள்பட சுகாதார வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தேங்கி இருக்கும் மழைநீரை 539 மோட்டார் மற்றும் ராட்சத பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பு மற்றும் அணுகு (சர்வீஸ்) சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்தன. இதனை பொது மக்கள் பலரும் வந்து பார்த்து செல்பி எடுக்கின்றனர். அவ்வாறு தேங்கி இருக்கும் நீரையும் வெளியேற்றுவதற்கான முயற்சியையும் மாநகராட்சி செய்து வருகிறது.

ஒரு தெருவில் உள்ள தண்ணீரை மற்றொரு தெரு வழியாக அகற்றும் போது, அந்த தெரு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சில இடங்களில் நடந்தது. தண்ணீர் அகற்றப்பட்ட, வடிந்த சில இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாகவும் காட்சியளித்தது. முக்கிய இடங்கள், சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

புறநகரும் மிதக்கிறது

சென்னை மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெரிய ராட்சத பள்ளம் ஒன்று விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, அந்த பள்ளங்களை மாநகராட்சியினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த ரேஷன் கடைகளுக்குள்ளும் தண்ணீர் சென்றது. இதனால் அங்கு இருந்த அரிசி, பருப்பு உள்பட சில பொருட்கள் சேதம் அடைந்தன. அதனை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று அகற்றியதை சில இடங்களில் பார்க்க முடிந்தது.

சென்னையை போலவே புறநகர் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர், காகிதபுரம், மேற்கு தாம்பரத்தில் உள்ள வரதராஜபுரம், முடிச்சூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, வேளச்சேரி ராம்நகர், ஊரப்பாக்கம், மணலி புதுநகர், சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலை போன்ற பல்வேறு இடங்களும் தண்ணீரில் மிதக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும்...

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் இதே துயரத்தை தான் எதிர்கொள்கிறோம். நோய்த் தொற்று பரவுவதற்கு முன்பு தண்ணீரை உடனடியாக அகற்றுவதோடு, எங்களின் துயர் துடைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story