கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற பெயிண்டர் கைது


கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 8:05 PM GMT (Updated: 15 Nov 2021 8:05 PM GMT)

கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பமாக, குடும்பத்தினருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து அவர்களை கொன்றதாக பெயிண்டர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (வயது 57), பார்த்திபன் (35), சக்திவேல் (61). இவர்கள் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த 3-ந் தேதி இவர்கள் 3 பேரும் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்தனர். மறுநாள் காலையில் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் 3 பேரும் சுருண்டு விழுந்து இறந்தனர்.

சயனைடு கலந்த மது

இதுகுறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த 3 பேரின் உடல்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் இறந்த 3 பேருடனும் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

குடும்பத்தினருக்கு தொல்லை

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) பெயிண்டர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், ராஜசேகர் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். முருகானந்தம் அந்த பெண்ணை அடைய முயன்றுள்ளார். இதற்காக அவர் அடிக்கடி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும் முருகானந்தம், தன்னுடைய நண்பர்கள் சக்திவேல், பார்த்திபன் ஆகியோருடன் ராஜசேகரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், முருகானந்தம் உள்பட 3 பேரையும் தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

பெயிண்டர் கைது

அதன்படி சம்பவத்தன்று அவர், தன்னிடம் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில் இருப்பதாக கூறி முருகானந்தத்திடம் கூறி உள்ளார். உடனே மதுகுடிக்கும் ஆசையில் முருகானந்தம், தனது நண்பர்கள் சக்திவேல், பார்த்திபன் ஆகியோருடன் சென்று ராஜசேகரை சந்தித்துள்ளார்.

அங்கு ராஜசேகர் மதுவில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த 3 பேரும் சுருண்டு விழுந்து இறந்தது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜசேகர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Next Story