திருமணத்துக்கு மணப்பெண்ணின் காதலன் வந்ததால் தகராறு திருமணம் நின்றது


திருமணத்துக்கு மணப்பெண்ணின் காதலன் வந்ததால் தகராறு திருமணம் நின்றது
x
தினத்தந்தி 15 Nov 2021 10:12 PM GMT (Updated: 15 Nov 2021 10:12 PM GMT)

திருமணத்துக்கு மணப்பெண்ணின் காதலன் வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் திருமணம் நின்று போனது.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி பகுதியில் இளம்பெண் ஒருவருக்கும், வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இருவீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண மண்டபம் ‘களை’ கட்டி இருந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்போது மணமேடையில் மணமகனுடன் நின்றிருந்த மணமகளிடம் வாலிபர் ஒருவர் நீண்டநேரமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த மாப்பிள்ளை வீட்டார், அவர் யார்? என மணப்பெண்ணிடம் கேட்டனர்.

காதலன் வந்ததால் தகராறு

அதற்கு மணப்பெண், “அவர் என்னுடைய காதலன். நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. என்னை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்தி வைப்பதாக” குண்டை தூக்கி போட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், இதுபற்றி மணப்பெண்ணின் தந்தையிடம் கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மணமகளின் தந்தை தாக்கப்பட்டார். அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திருமணம் நின்றது

இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது. இருவீட்டு உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், இருவீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகராறு காரணமாக நேற்று நடைபெற இருந்த திருமணமும் நின்றுபோனது. இதனால் நேற்று முன்தினம் மாலையில் ‘களை’ கட்டி இருந்த திருமண மண்டபம், நேற்று ‘களை’ இழந்ததுடன், இருவீட்டாரின் உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.

Next Story