தக்காளி, முருங்கைக்காய் தொடர்ந்து உச்சம்: பொங்கல் பண்டிகை வரை காய்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை


தக்காளி, முருங்கைக்காய் தொடர்ந்து உச்சம்: பொங்கல் பண்டிகை வரை காய்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை
x
தினத்தந்தி 16 Nov 2021 6:50 PM GMT (Updated: 16 Nov 2021 6:50 PM GMT)

தக்காளி, முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது என்றும், வருகிற பொங்கல் பண்டிகை வரை காய்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை,

தொடர் மழை, விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறி வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி, முருங்கைக்காய், பச்சை பட்டாணி உள்பட சில காய்கறி வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.90 வரையில் ரகத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. இது சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. சில்லரை கடைகளில் அது ரூ.150 வரை விற்கப்படுகிறது.

மேலும், வெங்காயம், கேரட், கத்தரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு உள்பட சில காய்கறி விலையும் தொடர்ந்து குறையாமல் உச்சத்திலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை வரை....

இந்தநிலையில் காய்கறி விலை உயர்வு தொடர்ந்து அதே நிலையில் இருக்குமா?, விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 400 முதல் 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 270 முதல் 300 லாரிகளில்தான் வருகிறது. உதாரணமாக தக்காளி நாளொன்றுக்கு 100 லாரிகளில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும். தற்போது 40 முதல் 50 லாரிகளில்தான் கொண்டு வரப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை உயருகிறது.

தக்காளியை பொறுத்தவரையில், இன்னும் 10 முதல் 15 நாட்களில் விலை ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்ற காய்கறி வகைகளை பொறுத்தவரையில், தற்போது விலை குறைய வாய்ப்பு இல்லை. வருகிற பொங்கல் பண்டிகை வரை இதே போன்ற விலை நிலவரத்தில்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

தக்காளி - ரூ.70 முதல் ரூ.90 வரை, பல்லாரி - ரூ.30 முதல் ரூ.40 வரை, உருளைக்கிழங்கு - ரூ.25 முதல் ரூ.30 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, அவரைக்காய் - ரூ.60 முதல் ரூ.65 வரை, கேரட் - ரூ.40 முதல் ரூ.50 வரை, பீட்ரூட் - ரூ.40, முள்ளங்கி - ரூ.30 முதல் ரூ.35 வரை, பீன்ஸ் - ரூ.35 முதல் ரூ.45 வரை, முருங்கைக்காய் - ரூ.80 முதல் ரூ.100 வரை, முட்டைக்கோஸ் - ரூ.20, கத்தரிக்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை, வெண்டைக்காய் - ரூ.30 முதல் ரூ.40 வரை, சவ்சவ் - ரூ.20, வெள்ளரிக்காய் - ரூ.15, சேனைக்கிழங்கு - ரூ.15, சேப்பக்கிழங்கு - ரூ.20, கோவக்காய் - ரூ.30, கொத்தவரங்காய் - ரூ.40, பூசணிக்காய், பரங்கிக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, காலிபிளவர் (ஒரு பூ) - ரூ.40 முதல் ரூ.50 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.8 முதல் ரூ.12 வரை, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.30 முதல் ரூ.35 வரை, பச்சை பட்டாணி - ரூ.200.

Next Story