இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்படும்


இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 16 Nov 2021 11:45 PM GMT (Updated: 16 Nov 2021 11:45 PM GMT)

இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி, ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பொது வசூல் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த அக்டோபர் 8-ந் தேதி, இணையவழி முறையில் கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கிவைக்கப்பட்டது. அதன்படி 5 ஆயிரத்து 720 கோவில்களில், கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, ஆயிரத்து 492 கோவில்கள் மூலமாக இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

3 மாதங்களில் நடவடிக்கை

இதன் தொடர்ச்சியாக அனைத்து கோவில்களின் அசையா சொத்துகளை வருமானம் ஈட்டும் சொத்துகளாக மாற்ற 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். கணினி மூலம் வாடகை அல்லது குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர்கள் வழக்கம் போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோவில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய கோவில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையினை செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்படும்

இந்த அரசு சட்டத்தின் படி நடைபெறும் அரசு. ஐகோர்ட்டு நீதிபதிகளின் வழிகாட்டுதல்படி நடக்கின்ற அரசு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்ட, மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் ஆன்மிக வகுப்புகள் தொடங்க உயர் கல்வித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி பெற்றவுடன் வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க பத்திரிகைகளில் உரிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா, கோவில் செயல் அதிகாரி ராதாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story