3 மாதங்கள் பழக்கம்: திருமணமானதை மறைத்து முகநூல் காதலனை நம்பிச்சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


3 மாதங்கள் பழக்கம்: திருமணமானதை மறைத்து முகநூல் காதலனை நம்பிச்சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 21 Nov 2021 11:43 AM GMT (Updated: 21 Nov 2021 11:43 AM GMT)

தேவகோட்டை அருேக இளம்பெண் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து முகநூல் காதலனை நம்பிச்சென்று அவரும் கைவிட்டதால், விஷம்குடித்து உயிரை மாய்த்தது விசாரணையில் தெரியவந்தது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மாணிக்கங்கோட்டை கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவருடைய மகள் நந்தினி (வயது 22). வீராசாமி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

நந்தினிக்கும் காளையார்கோவில் அருகே உள்ள மாந்தாளி கிராமத்தை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கண்ணன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 16-ந் தேதி சென்னையில் இருந்து குழந்தையுடன் வந்த நந்தினி, தன்னுடைய தாயாருடன் சென்று குழந்தையின் பிறந்தநாளுக்கு நகை வாங்கியுள்ளார். அதன்பின்னர் தேவகோட்டை பஸ் நிலையம் வந்த நந்தினி, தனது குழந்தையை தாயாரிடம் கொடுத்துவிட்டு மாயமானார்.

இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மணக்குடி பகுதியில் நந்தினி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

நந்தினியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பமாக பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன.

நந்தினி சாவதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வரும் தன்னுடைய தந்தை வீராசாமிக்கு போன் செய்துள்ளார். நான் ஒரு சிக்கலில் மாட்டி உள்ளேன். குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதை துருப்புச்சீட்டாக எடுத்துக்கொண்ட தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் அதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நந்தினிக்கு முகநூலில், விவேக் (22) என்பவருடன் பழக்கம் இருந்ததும், அவர்தான் நந்தினியின் சாவுக்கு காரணம் என தெரியவந்ததால் அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

நந்தினியும், விவேக்கும் கடந்த 3 மாதங்களாக பழகி வந்துள்ளனர். அப்போது விவேக்கிடம் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறினாராம். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேவகோட்டை வந்த நந்தினி, தனது தாயிடம் குழந்தையை ெகாடுத்துவிட்டு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் விவேக் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். அந்த விடுதியில் 2 நாட்கள் இருந்துள்ளனர். அப்போது நந்தினியின் கழுத்தில் கிடந்த தாலியை விவேக் பார்த்து, நீ திருமணம் ஆனவளா? எனக் கேட்டுள்ளார். அதன்பின் உண்மையை கூறிய நந்தினியிடம், நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என விவேக் கூறியுள்ளார்.

இதனால் நந்தினி விரக்தி அடைந்தார். பின்னர் விவேக் மட்டும் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் நந்தினி விஷம் வாங்கி வைத்துக் கொண்டார். சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு விவேக் நந்தினியை ஊருக்கு அனுப்ப முடிவு செய்து பஸ்சில் செல்ல கூறியுள்ளார். ஆனால் நந்தினி மறுத்து, மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி மனக்குடி அருகே அவரை விவேக் இறக்கி விட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் நந்தினி விஷம் குடித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தேவகோட்டை போலீசார் விவேக்கை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story