வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்


வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 21 Nov 2021 5:43 PM GMT (Updated: 21 Nov 2021 5:43 PM GMT)

பாகூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் வடிய தொடங்கியது. வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாகூர், நவ.22-
பாகூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் வடிய தொடங்கியது. வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊருக்குள் புகுந்த வெள்ளம்
புதுச்சேரி,      தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து    வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து    கடந்த 19-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
எனவே தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளை உடைத்து கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இதனால் கரையோரத்தில் உள்ள சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தான்மேடு கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
வீதிக்கு வந்த மக்கள்
இதேபோல் தமிழக பகுதியான அழகியநத்தம் கிராமத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெள்ளநீர் இரண்டாயிர வளாகம் கிராமம் வழியாக இருளஞ்சந்தை, பாகூர் கிராமத்தில் குடியிருப்புகளை மூழ்கடித்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகளில் கழுத்தளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வீடு, உடைமைகளை இழந்து பொதுமக்கள் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வீடுகள் சேதம்
சோரியாங்குப்பம் கிராமத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் அப்பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க இடமின்றி நிர்க்கதியாக நிற்கின்றனர். திருப்பனாம்பாக்கம் மேம்பாலம் செல்லும் பகுதியில் சாலை    சேதமாகி ராட்த பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வயல்வெளி பகுதியில் தேங்கி வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால்    விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நிவாரணம்
முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கால் பொது மக்கள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று மழை பெய்யாததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரும் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளன. இருப்பினும்     வெள்ளம் முழுமையாக வடிவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story