10-வது மெகா முகாம்: தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி


10-வது மெகா முகாம்: தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 21 Nov 2021 11:04 PM GMT (Updated: 21 Nov 2021 11:04 PM GMT)

தமிழகத்தில் நடைபெற்ற 10-வது மெகா தடுப்பூசி முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1¼ லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.

சென்னை,

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ந்தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் மாதம் 3-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், 10-ந்தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற 6-வது மெகா தடுப்பூசி முகாமில் 22.27 லட்சம் பேருக்கும், 30-ந் தேதி 7-வது கட்டமாக 32 ஆயிரம் இடங்களில் 17.14 லட்சம் பேருக்கும், 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16.40 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

10-வது கட்டம்

மெகா தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது கட்டமாக நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 50 ஆயிரம் இடங்களில் 10-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்தவகையில் தமிழக அரசிடம் கையிருப்பில் இருந்த 1 கோடி தடுப்பூசிகளுடன் காலை 7 மணி முதல் தொடங்கிய மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

18.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இரவு 7 மணி வரை நடைபெற்ற 10-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 18 லட்சத்து 21 ஆயிரத்து 5 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 580 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 48 ஆயிரத்து 425 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

இதில் சென்னையில் 1,600 முகாம்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 596 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story