ஆடு திருடியவர்களை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி


ஆடு திருடியவர்களை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி
x
தினத்தந்தி 22 Nov 2021 12:16 AM GMT (Updated: 22 Nov 2021 12:16 AM GMT)

புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆடுகளை மர்மநபர்கள் தொடர்ந்து திருடி வந்துள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்

இது தொடர்பாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் ஆடு திருடர்களை பிடிக்க நவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (வயது 50), ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பூலான்குடி காலனி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆடு ஒன்றை திருடி கொண்டு வந்தனர். அவர்களை பூமிநாதன், சித்திரைவேல் ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

மோட்டார் சைக்கிளில் விரட்டினார்

உடனடியாக பூமிநாதன் தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வேகமாக விரட்டி சென்றார். மர்மநபர்கள் பூலான்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நோக்கி செல்வதற்காக வேகமாக வந்தனர்.

பூமிநாதனும் அவர்களை விடாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி சென்றார். அவரை பின்தொடர்ந்து ஏட்டு சித்திரைவேலும் விரட்டி சென்றார். ஆனால் அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.

அரிவாளால் வெட்டிக்கொலை

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம்பள்ளத்துப்பட்டியில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் ஆடு திருடர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. துணிச்சலுடன் சுமார் 15 கி.மீ. தூரம் விரட்டி வந்த பூமிநாதன், ஆடு திருடர்களை மடக்கி பிடித்தார்.

உடனே இதுகுறித்து சக போலீஸ்காரர் சித்திரைவேலுக்கு செல்போன் மூலம் அவர் தகவல் தெரிவித்தார். மேலும் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் குளத்தூரில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கும் இடத்தை தகவல் தெரிவித்து வருமாறு கூறினார்.

ஆனால் அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பூமிநாதனின் தலை மற்றும் கழுத்தில் திருடர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில்ஆட்டுடன் தப்பி சென்று விட்டனர்.

போலீஸ் அதிகாரிகள்

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் வந்தபோது பூமிநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த கொலை நடைபெற்ற போது நள்ளிரவு 2.30 மணி இருக்கும் எனக்கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் பூமிநாதனின் உடல் அப்படியே நேற்று காலை வரை கிடந்தது. அவர் விரட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தியபடிஇருந்தது.

சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கீரனூர் போலீசார், அதிகாரிகள் நேற்று அதிகாலை விரைந்து வந்தனர்.

8 தனிப்படைகள்

கொலையான பூமிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. நாய் அந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடினர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இதற்கிடையில் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். பக்கத்து மாவட்டங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்க கூறினர். மர்மநபர்களை போலீசார் விரட்டி வந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

இதில் ஆடு திருடர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விரட்டி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செல்போன் உடைப்பு

கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் வாக்கி-டாக்கி, செல்போனை அருகில் உள்ள சுரங்கபாதை தண்ணீரில் மர்மநபர்கள் தூக்கி வீசியிருக்கின்றனர். தண்ணீரை வெளியேற்றியபின் அதில் இருந்து ‘வாக்கி-டாக்கி’, செல்போனை மீட்டனர்.

மேலும் செல்போன் கல்லால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பூமிநாதனின் செல்போனை மர்மநபர்கள் சேதப்படுத்தி தூக்கி வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர்.

டி.ஐ.ஜி. பேட்டி

இந்த கொலை சம்பந்தமாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆடு திருடர்களை துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.

இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் 2 பேராக செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களும் அப்படித்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் இவருடன் சென்ற சித்திரைவேல் என்ற காவலரால் பின்தொடர்ந்து செல்ல இயலாமல் வழி தெரியாமல் சென்றுவிட்டார். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் சிக்னல் மூலம் விசாரணை

சம்பவம் நடந்த இடத்தின் அருகே மற்றும் நவல்பட்டு பகுதியில் செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டதில் ‘டவர் சிக்னலில்’ பதிவானதை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படி இருந்த எண்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.1 கோடி நிதியுதவி

சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ரோந்து பணியில் இருக்கும்போது மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகள்

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் உடல், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடந்தன.

அப்போது, தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.(பொறுப்பு) கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் அடக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், மகனும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

வாழ்க்கை குறிப்பு

கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின்(வயது 50) சொந்த ஊர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு ஆகும். கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் திருச்சி மாவட்டம் மணிகண்டம், திருவெறும்பூர், துவாக்குடி என திருச்சி மாவட்டத்திலேயே போலீஸ் ஏட்டாக பணியாற்றிய பூமிநாதன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருடைய மனைவி கவிதா(45). இவர்களுக்கு குகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story