சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை
கோவையில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக ரூ.1,132 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறன.
மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.332 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும்.
மாவட்ட மக்களின் கூடுதல் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி செலவில் நலவாழ்வு மையங்கள் துவங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டும்.
தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். கோவை முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.
நான் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் பணியாற்றுவதில்லை. ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன். அப்படிதான் அண்ணா, கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார்கள்.
சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகருக்குள் செயல்படும் சிறைச்சாலையை நகருக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதிகம் பேச மாட்டேன், செயலில் காட்டுவேன். கோவையை தலைசிறந்த மாவட்டமாக்க ஆயத்தமாகிவிட்டோம் என கூறினார்.
Related Tags :
Next Story