தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
x
தினத்தந்தி 22 Nov 2021 9:24 PM GMT (Updated: 22 Nov 2021 9:24 PM GMT)

மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.10-ம் குறைத்துள்ள நிலையில், அதனை பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட இந்தியாவில் 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியினை கணிசமாக குறைத்துள்ள நிலையில், தமிழக மக்கள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை தமிழக அரசு குறைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், 2014-ம் ஆண்டில் இருந்த அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் என்றும் நிதி அமைச்சர் கூறியிருப்பது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் தமிழகத்தை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் அதை செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று நிதி அமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது.

மக்களை ஏமாற்றும் செயல்

மத்திய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும்போது தமிழக அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது. இது மக்களை ஏமாற்றும் செயல். மத்திய அரசின் இந்த வரி விதிப்பு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்டுதானே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? இல்லையே.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும் தானே லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. அதேசமயத்தில் வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ளன.

முதல்-அமைச்சருக்கு நினைவூட்ட...

தி.மு.க.வின் இந்த அறிவிப்பு ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு நாளொறு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்துகொண்டே செல்லும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

இந்த தருணத்தில், “சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். அவன் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் அவனுக்கு தெரியும்” என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை முதல்-அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story