சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை சம்பவம்: பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்


சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை சம்பவம்: பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 22 Nov 2021 11:26 PM GMT (Updated: 22 Nov 2021 11:26 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை தொடர்பாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 50). இவரும், ஏட்டு சித்திரைவேலும் கடந்த 20-ந்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பூலான்குடி காலனியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஆட்டை திருடிக்கொண்டு வந்தனர்.

அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் 3 பேரும் தப்பிச்சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை அருகே அவர்களை மடக்கி பிடித்தார். பின்னால் வந்த ஏட்டு சித்திரைவேல் வழி தவறி சென்றதால் அவர் சப்-இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர தாமதமானது.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை

இதற்கிடையில் குளத்தூரில் வசிக்கும் தனது போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சேகருக்கு தகவல் தெரிவித்து வருமாறு கூறினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பூமிநாதனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர். கொலையான சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை சேதப்படுத்தி அருகில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் வீசியிருந்தனர்.

இதில் அவரது செல்போன் எண்ணை வைத்தும், அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களின் சிக்னல் டவரில் பதிவானதை கொண்டும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் செல்போன் அழைப்பில் கடைசியாக பதிவாகி இருந்த ஒரு எண்ணை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆடு திருடியது தொடர்பாக தனது மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பிடித்து வைத்திருப்பதாக பேசியதாக அவர் கூறினார்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து விசாரணையில் அந்த பெண்ணின் மகன் மணிகண்டன் (19) என்பதும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

அவருடன் வந்த 2 பேரில் ஒருவர் புதுக்கோட்டை அன்னாப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், மற்றொருவர் கே.புதுப்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் என்பதும் தெரிந்தது.

மாணவர்கள்

இவர்களில் ஒருவர் 9-ம் வகுப்பும், மற்றொருவர் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேலும் உறவினர்களான இவர்கள் 3 பேரும் கே.புதுப்பட்டியில் அவர்களது உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கே.புதுப்பட்டிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை மண்டையூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அரிவாள் பறிமுதல்

இதில் அவர்கள் தான் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மற்ற 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க பணிகளை மேற்கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Next Story