மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிப்பிடித்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு


மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிப்பிடித்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
x
தினத்தந்தி 23 Nov 2021 11:10 PM GMT (Updated: 23 Nov 2021 11:10 PM GMT)

மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிப்பிடித்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததுடன், நேரில் அழைத்து வாழ்த்து மடலும் வழங்கினார்.

கோவை,

கோவை மாவட்டம், சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனின் வீரதீர செயலினை பாராட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடலில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டம்-ஒழுங்குக்கு சவால்விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே காவல்துறையின் முதன்மை பணியாகும். அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப்பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள்.

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான தாங்களும், தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும், நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்துப்பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்கேத்திற்கிடமான 2 இளைஞர்களைத் தாங்கள் விசாரிக்கையில், சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்று சண்டையிட்டதில், தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும், காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள்.

பாராட்டு

அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள். மக்கள் உழைத்துச் சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களைத் திட்டமிட்டுத் திருடி வந்த நபர்களை, தாங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிச் சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். தங்களின் துணிச்சல் மிக்க செயல்பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான- துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.

தங்களின் வீரதீர செயலினைத் தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டியுள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் என்ற முறையில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்கை சமரசமின்றி நிலைநாட்டும் தமிழ்நாடு காவல்துறையினரின் துணிச்சல் மிக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story