தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 8½ லட்சம் பேர் மனு


தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 8½ லட்சம் பேர் மனு
x
தினத்தந்தி 23 Nov 2021 11:57 PM GMT (Updated: 23 Nov 2021 11:57 PM GMT)

தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க 8½ லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2022 அன்றைய தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக கடந்த 13, 14, 20 மற்றும் 21-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, தொகுதிக்குள்ளே முகவரி மாற்றம் செய்ய உள்ளிட்டவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6 லட்சத்து 14 ஆயிரத்து 166 பேர் மனு கொடுத்துள்ளனர்.

8 லட்சத்து 59 ஆயிரம் பேர் மனு

கடந்த 14-ந் தேதியன்று நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக 1 லட்சத்து 518 பேர் மனு கொடுத்துள்ளனர். பெயர் திருத்தம் செய்ய, முகவரி திருத்தம் செய்வதற்காக 78 ஆயிரத்து 862 பேர் மனு கொடுத்துள்ளனர்.

ஒரே சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 66 ஆயிரத்து 33 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க என ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களிலும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Next Story