மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி
x
தினத்தந்தி 24 Nov 2021 4:05 AM GMT (Updated: 24 Nov 2021 4:05 AM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 30 ஆயிரம் கன அடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி என அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. 

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் தற்போது நீர் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story