பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை


பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை
x
தினத்தந்தி 24 Nov 2021 7:07 PM GMT (Updated: 24 Nov 2021 7:07 PM GMT)

பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்,
சாலை மறியல்
பாலியல் தொல்லையால் கரூரில் 17 வயதான பிளஸ்-2 மாணவி கடந்த 19-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 78 மாணவர்களை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.  பின்னர் மதியம் மாணவர்களை போலீசார் விடுவித்தனர்.
வகுப்புகள் புறக்கணிப்பு
இதேபோல் இதே கோரிக்கையை வலியுறுத்தி தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். 
இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கலெக்டரிடம் மனு
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அரசு கலைக்கல்லூரியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது காளியப்பனூர் பகுதியில் பேரணியாக சென்ற மாணவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
மாணவர்களின் திடீர் போராட்டம் காரணமாக கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
வருகிற 29-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் உருக்கமான வேண்டுகோள்
கரூரில் பிளஸ்-2 மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் மற்றும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் பிரச்சினை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story