ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’


ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
x
தினத்தந்தி 24 Nov 2021 10:55 PM GMT (Updated: 24 Nov 2021 10:55 PM GMT)

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கியதை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளதே?

பதில்:- ஜெயலலிதா வாழ்ந்து மறைந்து அந்த இல்லம் தொண்டர்களின் உள்ளத்தில் கோவிலாக இருக்கும் இடம். நினைவில்லமாக உருவாக்கப்படவேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணத்துக்கு செயல்வடிவம் தருகின்ற வகையிலே அரசாணை போடப்பட்டு நினைவு இல்லம் ஆக்கப்பட்டது. இன்றைக்கு இதற்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கின்ற நிலையிலே மேல் நடவடிக்கை குறித்தும், அரசு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்தும் அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு செய்யும்.

அ.தி.மு.க. ரத்தம்

கேள்வி:- அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளாரே?

பதில்:- அரசியல் வியாபாரத்தின் காரணமாக எந்த குளத்தில் தண்ணீர் இருக்கின்றதோ அங்கு போவார்கள். உளப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக அ.தி.மு.க. ரத்தம் ஓடுகின்ற தொண்டன் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தைவிட்டு எந்த நிலையிலும் கட்சி மாறமாட்டார்கள்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மகிழ்ச்சியாக, எழுச்சியாக நடைபெற்றது. உயர்மட்ட குழுவிற்கு அதிகாரம் அளிப்பது, கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சி உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story