ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை என்ன செய்ய திட்டம். ...?ஜெ.தீபா பரபரப்பு பேட்டி


ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை என்ன செய்ய திட்டம். ...?ஜெ.தீபா பரபரப்பு  பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2021 4:45 AM GMT (Updated: 25 Nov 2021 4:45 AM GMT)

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.

சென்னை 

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன்.'

நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புகிறேன். அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும்.

 ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?

பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.

கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.

கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?

பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

மேற்கண்டவாறு ஜெ.தீபா பதில் அளித்தார்.

Next Story