தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்


தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 6:31 PM GMT (Updated: 25 Nov 2021 6:31 PM GMT)

தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.



சென்னை,

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் தொடங்கினார். ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் சாப்பிட வழி செய்யும் வகையில் திறக்கப்பட்ட இந்த உணவகத்தின் மூலம், ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். மேலும் பெண்கள் பலரும் இந்த அம்மா உணவகத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 

இந்த உணவகம் தொடக்கப்பட்டதில் இருந்து சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தற்போது அ.தி.மு.க. ஆட்சி நிறைவடைந்துவிட்டாலும் அம்மா உணவகம் தடையின்றி செயல்பட்டு வருகிறது.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ​​பொதுமக்கள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற, இந்திய மாதிரி சமுதாய சமையல் கூடம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று பேசிய அவர், வருங்காலத்தில் தமிழகத்தில் 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திடவும் பொதுமக்கள் அனைவரும் பயனடையும் வகையில், விரிவுபடுத்தவும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் கீழ் ஒன்றிய அரசு 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.  மேலும் அம்மா உணவகம் என்ற பெயரில் 650 சமூக உணவகங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story