கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது


கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
x
தினத்தந்தி 25 Nov 2021 11:21 PM GMT (Updated: 25 Nov 2021 11:21 PM GMT)

கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 89 பேருக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை,

கொரோனா கால கட்டத்தில் தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னை மண்டல அளவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

சென்னை மண்டல தபால் துறை தலைவர் வீணா ஆர்.சீனிவாஸ் தலைமை தாங்கினார். தமிழக அரசின் இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா விருதுகளை வழங்கினார்.

கடுமையான பணியில் ஊழியர்கள்

பின்னர் அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்த கடந்த ஆண்டு தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தடையில்லா வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தபால் சேவைகளில் கடுமையாக ஈடுபட்டது பாராட்டுக்குரியது. அதில் பெண்களும் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றியது பெருமையாக உள்ளது.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தபால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செய்யும் பணி போற்றுதலுக்கு உரியது. தொடர்ந்து சமுதாயத்திற்கு சிறப்பான பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தபால்காரர் கே.சீனிவாசன்

நிகழ்ச்சியில் அதிக வருவாய் பிரிவில் தாம்பரம், சென்னை மாநகரம் தெற்கு, புதுச்சேரிக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த நிர்வாக அதிகாரியாக கூடுவாஞ்சேரி தபால் அலுவலக அதிகாரி சுகுணா, செங்கல்பட்டு வணிக பிரிவு அதிகாரி டி.ராமமூர்த்தி, கூடுவாஞ்சேரியை அடுத்து உள்ள கன்னிவாக்கம் கிராமப்புற தபால்காரர் கே.சீனிவாசன் உள்ளிட்ட 89 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இளைஞர் விடுதிகள் சங்கத்தின் தேசிய தலைவர் வெங்கட் நாராயணன் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தபால் துறை அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தபால் துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story