கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்ட மைதானத்தை திறந்தால்: ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்க தயார்


கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்ட மைதானத்தை திறந்தால்: ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்க தயார்
x
தினத்தந்தி 25 Nov 2021 11:54 PM GMT (Updated: 25 Nov 2021 11:54 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டிருக்கும் தக்காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்காளியை ரூ.40-க்கு விற்க தயாராக உள்ளதாக ஐகோர்ட்டில் தக்காளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அண்மைக்காலமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல இல்லதரசிகள் தக்காளி இல்லாமலேயே சமையல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், வக்கீல் சிவா ஆஜராகி கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட், கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில், 86 சென்ட் நிலப்பரப்பில் உள்ள ‘தக்காளி கிரவுண்ட்' என்ற மைதானத்தை மட்டும் திறக்கவில்லை.

விலை குறைப்பு

இந்த மைதானம்தான் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வரமுடியும்.

இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ மனுதாரர் சங்கம் தயாராக உள்ளது.

இன்று விசாரணை

எனவே தக்காளி மைதானத்தை திறக்கக்கோரிய மனுதாரர் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் முறையிட்டார்.

இவரது கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.

Next Story