கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 11:57 PM GMT (Updated: 26 Nov 2021 12:51 AM GMT)

தமிழகத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தெற்குவங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவில்லை. இருந்தபோதிலும் நேற்று தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் வலுத்து கனமழையாக பெய்ய தொடங்கியது. கனமழையால் காலை 11 மணி முதல் பள்ளிகளுக்கும், மதியத்துக்கு பிறகு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இரவு வரை நல்ல மழை பெய்தபடி இருந்தது. தேனியில் நேற்று மாலை 3.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 1 மணி நேரம் இந்த கன மழை நீடித்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது. இதேபோல் போடி, உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று மாலை மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையிலிருந்து பரவலான மழை பெய்து வருகிறது. மதியத்திற்கு மேல் பலத்த மழையும் பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில்  தொடர்மழை காரணமாகவும், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாலும் தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தஞ்சை, தேனி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story