தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை


தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Nov 2021 11:58 PM GMT (Updated: 25 Nov 2021 11:58 PM GMT)

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெருமழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தான் பெருமளவில் காய்கறி விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களில் குறிப்பாக ஆந்திராவில் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. குறிப்பாக தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை ரூ.79-க்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்து வருகிறது.

தோட்டக்கலை துறை சார்பில்...

இந்தநிலையில் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மக்களை இன்னும் நிம்மதி பெருமூச்சுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்திலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

தொடக்கத்தில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே தக்காளி வாங்கி சென்றனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீயாக பரவ அருகில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தீவுத்திடல் பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிய தொடங்கினர். மேலும் சென்னை பல்கலைக்கழக அலுவலக ஊழியர்களும் அதிகளவில் வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான தக்காளியை வாங்கி சென்றனர். மக்களின் வசதிக்காக தக்காளி ஒரு கிலோ எடையில் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது. ரூ.75-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் தகவலை அருகில் உள்ள உறவினர், நண்பர்களுக்கும் மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக 2 டன் அளவில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நலனுக்காக ஒரு நாள் விட்டு ஒருநாள் தக்காளி விற்பனை செய்யப்படும். வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு மட்டுமே விற்பனை செய்கிறோம். தக்காளி விலை ஓரளவு சீரானதும் இந்த நடவடிக்கை கைவிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘ஒரு பக்கம் விண்ணை தொடும் அளவுக்கு தக்காளி விலை உயர்ந்தாலும், மறுபுறம் இதுபோல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை ஓரளவு நகரின் பல பகுதிகளில் விரிவுபடுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். விற்பனை செய்யப்படும் தக்காளியும் நன்றாகவே இருக்கிறது’’, என்றனர்.

Next Story