அ.தி.மு.க.வில் விருப்ப மனு இன்று முதல் வினியோகம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு வாங்கும் பணி இன்று துவங்குகிறது.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு வாங்கும் பணி இன்று துவங்கும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இதுபற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனையொட்டி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் 29ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான கட்டண அசல் ரசீதை, மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம்.
விருப்ப மனு பெறுவது தொடர்பான விபரங்களை கட்சியினர் அனைவரும் அறிந்து கொள்ள மாவட்ட செயலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story