மழையால் வீடுகளின் சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பெண்கள் பலி


மழையால் வீடுகளின் சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பெண்கள் பலி
x
தினத்தந்தி 26 Nov 2021 8:00 PM GMT (Updated: 26 Nov 2021 8:00 PM GMT)

மழையால் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கீழப்பத்தையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சூர்யா (29). இந்த தம்பதியின் மகள்கள் ஜோதி (13), அருள்பேபி (3), மகன் பவித்ரன் (11). நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, சுரேசின் குடிசை வீடு நேற்று அதிகாலை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் சுரேஷ், சூர்யா, அருள்பேபி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த குழந்தை அருள்பேபி பரிதாபமாக இறந்தது. தம்பதி இருவரும் படுகாயங்களுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

2 மூதாட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம் காவாங்கரை பகுதியில் ராமன் என்பவரின் மனைவி பச்சையம்மாள் (70) ஓலை குடிசை போட்டு தனிமையில் வசித்து வந்தார். சமீபத்தில் பெய்த மழையால் குடிசையின் தரையும், மண் சுவர்களும் ஈரமாக இருந்தது. அதில் தான் அவர் படுத்து தூங்கி எழுந்து வந்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் ஓலை குடிசையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென குடிசையின் மண்சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது. அதில் படுத்த படுக்கையாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை கடைவீதி தெருவை சேர்ந்தவர் சுல்தான் பீவி (75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த கனமழைக்கு அவருடைய வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அதில் இடிபாடுகளில் சிக்கிய சுல்தான் பீவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Next Story