பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு மு.க.ஸ்டாலின் பேச்சு


பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 27 Nov 2021 12:07 AM GMT (Updated: 27 Nov 2021 12:07 AM GMT)

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு என்றும், யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியை கேள்விப்படும்போது உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

அறத்தையும், பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில், இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றை பற்றி பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது.

பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

பாலியல் சீண்டல்கள்

சக உயிராக பெண்ணை பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனை தடுக்க முடியாது. உடல் ரீதியாக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன.

அந்தச் சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகைய நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன்வர வேண்டும்.

பள்ளியின் ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார்களை தர வேண்டும். அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக்கூடாது.

புகார்கள் மீது அரசு நடவடிக்கை

இதை மற்ற அனைத்து பிரசசி்னைகளையும் விட மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது. பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதனை செய்திகளில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள்.

உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர இந்த அரசு தயங்காது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது.

போக்சோ நீதிமன்றங்கள்

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக நிதியம் ஒன்று செயல்படுகிறது. போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்துள்ளது. மேலும், 4 மாவட்டங்களில் நிறுவ ஆணையிடப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண்.14417 குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டில் இருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும். அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் காட்ட வேண்டும். தங்களிடம் பயிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாக வேண்டும்.

யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு எளிமையாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். ஒரே வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக வாழ வேண்டாம். அன்புக் குழந்தைகளே, உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

ஒரு முதல்-அமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம் இருக்கிறது

ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள். வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முடியும்.

எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக, உங்கள் சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம். நான் இருக்கிறேன். அரசாங்கம் இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story