கனமழையால் தொடர் விடுமுறை: தேர்வு நடத்துவது குறித்து பள்ளியே முடிவு செய்யலாம்: சிபிஎஸ்இ நிர்வாகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Nov 2021 8:42 AM GMT (Updated: 27 Nov 2021 8:42 AM GMT)

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என மத்திய அரசின் சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், 2ஆம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும் என்றும், பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தேர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

இந்த சூழலில் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் இன்னும் இரு தினங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இரண்டு வாரங்களாகவே பள்ளிகள் முறையாகச் செயல்படவில்லை. இன்றும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. 

இந்நிலையில்  மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ வாரியத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story