தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு....!!


தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு....!!
x
தினத்தந்தி 28 Nov 2021 2:11 AM GMT (Updated: 28 Nov 2021 5:31 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும்,

அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி (புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

குமரி கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆவடி 20 செ.மீ., மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யூர் தலா 18 செ.மீ., கட்டப்பாக்கம் 17 செ.மீ., திருக்கழுக்குன்றம் 16 செ.மீ., மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை தலா 15 செ.மீ., திருவள்ளூர் 13 செ.மீ., காஞ்சீபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி, தாம்பரம், அம்பத்தூர் தலா 12 செ.மீ., சிதம்பரம், கொரட்டூர், திருப்போரூர், செங்குன்றம் தலா 11 செ.மீ., கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 10 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 34 செ.மீ. மழை பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இயல்பை விட 74 சதவீதம் அதிகமாக 60 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமானில் உருவாகும் தாழ்வு பகுதியால் மழை இருக்குமா?

தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இந்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு தொடர்ந்து மழை இருக்குமா? என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசனிடம் கேட்டபோது, ‘அந்தமானில் உருவாகும் தாழ்வு பகுதி, வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு தற்போது வரை வாய்ப்பு இல்லை. ஆனால் அது வலுப்பெறாமல் கீழ் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது' என்றார்.


Next Story