2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 9:28 PM GMT (Updated: 28 Nov 2021 9:28 PM GMT)

காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி பிரியா(வயது28). 100 நாள் வேலைத்திட்ட வேலைக்கு சென்றதுடன் 4 ஆடுகளையும் வளர்த்து வந்தார்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது 9 வயது பெண் குழந்தை தர்ஷினி பிரியா. 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய மகன் சிவசண்முகவேல் (5). மாற்றுத்திறனாளி.

தகராறு

சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில் தினசரி லட்சுமி பிரியாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி பிரியாவை சந்தேகப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை லட்சுமி பிரியா யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லட்சுமி பிரியா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்கு சென்றார்.

குழந்தைகளுடன் தற்கொலை

அங்கு 2 குழந்தைகளையும் சேலையால் தன் உடலுடன் கட்டிக்கொண்டு காலில் கல்லை கட்டி கொண்டு கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த லட்சுமிபிரியாவும், 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.

Next Story