வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கண்காணிப்பு விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கண்காணிப்பு விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 Nov 2021 10:09 PM GMT (Updated: 28 Nov 2021 10:09 PM GMT)

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

சென்னை,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த வைரசுக்கு பயந்து பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் ரத்து செய்திருக்கின்றன. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிட கூடாது என்ற வகையில் மாநில அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.

ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு டாக்டர் பெருமாள், திருச்சி விமான நிலையத்துக்கு டாக்டர் ஸ்ரீராம், கோவை விமான நிலையத்துக்கு டாக்டர் விஜயகுமார், மதுரை விமான நிலையத்துக்கு டாக்டர் அருண் சுந்தரேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதேவேளை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகம் வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தாலும், விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதானை மேற்கொள்ளப்படும். அதில் கொரோனா இல்லை என உறுதியாகும் நபர்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு

தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல், ஐரோப்பா ஆகிய 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு தொற்று இல்லாத சூழலில் அவர்கள் 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். 8-வது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் நெகட்டிப் என்று அறியப்பட்டாலும், அவர்களது உடல்நிலை மேலும் 7 நாட்கள் கண்காணிக்கப்படும். இப்படியாக 14 நாட்கள் பரிசோதனை கால வளையத்துக்குள் அவர்கள் வைக்கப்படுவார்கள்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு வரையறுத்த கட்டுப்பாட்டு அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படும். இப்படி கண்காணிக்கப்படும் நபர்களுக்கு வீட்டு தனிமையில் இருக்கும்போதே, பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போதோ கொரோனா தொற்று இருப்பது தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம்

இதற்கிடையே ஒமிக்ரான் வகை கொரோனாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள், பொது சுகாதாரத்துறை இயக்குனர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Next Story