துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை


துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Nov 2021 11:11 PM GMT (Updated: 28 Nov 2021 11:11 PM GMT)

துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை அடையாறு, எல்.பி.சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 39). தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பெயர் பைரவி (35). டாக்டரான இவர், முக அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணர். போயஸ் கார்டன் பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இருவரும் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்கள். ஆளுக்கொரு குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் மனமொத்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர். பைரவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தது. தனது பெற்றோர் வீட்டில் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.

குண்டு பாய்ந்து காயம்

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த செந்தில், நேற்று முன்தினம் இரவு தனது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

உரிய அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியை தனது பாதுகாப்புக்காக செந்தில் வைத்திருந்தார். அந்த துப்பாக்கியை துடைத்தபோது, அது வெடித்து, தனது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து விட்டது என்று செந்தில் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சியா?

நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியை துடைக்க முற்பட்டது ஏன்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏதும் ஏற்பட்டதா என்று போலீஸ் தரப்பில் தொ டர்ந்து விசாரணை நடக்கிறது. அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story