நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 29 Nov 2021 6:23 PM GMT (Updated: 29 Nov 2021 6:23 PM GMT)

நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கலைஞரின் உளியின் ஓசை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் விருது, மகதீரா திரைப்படத்தில் பணியாற்றி தேசிய விருது எனப் பல விருதுகளை வென்றவரும்; தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தவருமான சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் என்றே நம்பியிருந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story