அம்மா உணவக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை


அம்மா உணவக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2021 8:05 PM GMT (Updated: 29 Nov 2021 8:05 PM GMT)

அம்மா உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை நீக்காமல் அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் இதற்கு முரணான நிலைதான் தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளிலும் நிலவுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையில் இருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர். சில இடங்களில் நிதிச்சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நியாயமற்ற செயல்

இந்த சூழ்நிலையில் கம்பம் நகர தி.மு.க. செயலாளர், அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம், தாங்கள்தான் 7 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும், தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தி தருவதாகவும், கட்சிப்பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் 10 ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

வழிவகைசெய்யவேண்டும்

அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதை தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story