ஆடை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு: நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆடை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு: நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:12 PM GMT (Updated: 29 Nov 2021 11:12 PM GMT)

ஆடை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்படுவதால், நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஆடை உற்பத்தியாளர்கள் எனக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பருத்தி மற்றும் நூல் விலை நிலையற்றிருப்பதால், அதன் தாக்கம் துணிகள் மற்றும் ஆடைகளின் விலையின் மேல் ஏற்படும் அவலநிலை உருவாகியிருப்பதாக கூறியுள்ளனர்.

ஜவுளி தொழிற்சாலைகள்தான், தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களில் 2-வது இடம் பெறுகின்றன. நாட்டில் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை, அதிக அளவு ஆடை ஏற்றுமதி ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட கால ஏற்றுமதி வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த இடையூறாக உள்ளது.

முக்கிய காரணம்

இந்தியாவில் நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்.

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5 சதவீதம் அடிப்படை சுங்க வரி, 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10 சதவீதம் சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11 சதவீதமாக உயர்ந்து, அதுவே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கொள்கை நடவடிக்கை

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். அதன்படி,

* ஊகத்தின் அடிப்படையிலான வணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

* உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை நீங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story