கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2021 11:47 PM GMT (Updated: 29 Nov 2021 11:47 PM GMT)

உச்சத்தில் உள்ள தக்காளி விலையை குறைப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோயம்பேடு மார்க்கெட்டில், தக்காளி லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி, தக்காளியை இறக்குவதற்கு 85 சென்ட்டில் தக்காளி மைதானம் உள்ளது. இதுதான் கொரோனா அதிகம் பரவும் இடம் என்று அறிவித்து, இந்த மைதானத்தை அதிகாரிகள் மூடி விட்டனர்.

இதை எதிர்த்து தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், தற்போது தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மைதானத்தை திறந்தால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை லாரியில் கொண்டு வந்து இறக்கி, ஒரு கிலோ தக்காளியை ரூ.40-க்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று கூறியிருந்தனர்.

குழப்பம் ஏற்படும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பொதுநலன் கருதி தக்காளி விலை குறையும் வரை சில வாரங்களுக்கு லாரிகளை நிறுத்த அனுமதிக்க முடியுமா? என்று மார்க்கெட் கமிட்டிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 14-வது நுழைவு வாயில் அருகே தற்காலிகமாக நிலம் ஒதுக்கி தக்காளி லாரிகளுக்கு அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வக்கீல் சிவா, “அந்த இடம் ஏற்கனவே, கொத்தமல்லி தழை மற்றும் புதினா வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம். அந்த இடத்தை தக்காளி வியாபாரிகளுக்கு ஒதுக்கினால், தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார்.

இன்று முதல்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “கடந்த சில வாரங்களாக பெய்து வரும் இடைவிடாத மழையினால், தக்காளியின் விலை அதி பயங்கரமாக உயர்ந்துள்ளது. எனவே, தக்காளி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விலையும் குறையத் தொடங்கிவிடும். எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில், லாரியில் இருந்து தக்காளியை இறக்கவும், காலி தக்காளி பெட்டிகளை ஏற்றவும் ஒரு ஏக்கர் நிலத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் 4 வாரத்துக்கு அதிகாரிகள் ஒதுக்க வேண்டும். அதேநேரம், லாரியில் இருக்கும் தக்காளிகளை அதில் இருந்தபடியே மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது. இதை மீறும் வியாபாரிகளின் லாரிகளை அந்த இடத்துக்கு அனுமதிக்கக்கூடாது. விசாரணையை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story