12,959 கோவில்களில் ஒரு கால பூஜைக்காக ரூ.129½ கோடி முதலீடு - மு.க.ஸ்டாலின் காசோலை வழங்கினார்


12,959 கோவில்களில் ஒரு கால பூஜைக்காக ரூ.129½ கோடி முதலீடு - மு.க.ஸ்டாலின் காசோலை வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:50 PM GMT (Updated: 29 Nov 2021 11:50 PM GMT)

12,959 கோவில்களில் ஒரு கால பூஜை செய்ய ஏதுவாக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.129 கோடியே 59 லட்சம் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

போதிய வருமானம் இல்லாத கோவில்களில் ஒரு கால பூஜையாவது நடைபெறுவதற்கு ஏதுவாக பெரிய கோவில்களின் உபரி நிதியிலிருந்து நிதி உதவி செய்யும் விதமாக, ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியின் கீழ் ரூ.5 கோடி வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து கோவில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டது.

தற்போது, ஒருகால பூஜை நடைபெறும் 12 ஆயிரத்து 959 கோவில்களுக்கு வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி மொத்தம் ரூ.129 கோடியே 59 லட்சத்துக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

இதன்மூலம் கோவில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைப்பதால், பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, ஒருகால பூஜை மேற்கொள்ளும் கோவில்களை சேர்ந்த அர்ச்சர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் ஆகியோர் கூடுதலாக நிதி வழங்கியமைக்காக முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story