ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சரத்குமார் வேண்டுகோள்


ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சரத்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Nov 2021 6:56 PM GMT (Updated: 30 Nov 2021 6:56 PM GMT)

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சரத்குமார் வேண்டுகோள்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24 -ந் தேதி கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் வைரஸ், ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டு, உலக அளவில் பரவக்கூடிய நோய்த்தொற்று என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நோய்த்தொற்று பல மடங்கு வீரியம் கொண்டது என்பதால் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருவதில் இருந்தும், ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களையும் இத்தொற்று பாதிப்படையச் செய்யும் என்பதில் இருந்தும் நோயின் தீவிர தன்மையை புரிந்து கொள்ள முடியும். எனவே, உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றன.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படாமலிருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும், தடுப்பூசி எடுத்துகொள்ளாதவர்களும் கொரோனா தொற்றின் போது கொண்டிருந்த விழிப்புணர்வைவிட கூடுதல் விழிப்புணர்வுடன், பாதுகாப்பாக இருப்பது மிகமிக அவசியம். மேலும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி குடும்பத்தின் பாதுகாப்பையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story