குடும்ப தகராறில் ஆசிரியை வெட்டிக்கொலை மாமனார் போலீசில் சரண்


குடும்ப தகராறில் ஆசிரியை வெட்டிக்கொலை மாமனார் போலீசில் சரண்
x
தினத்தந்தி 1 Dec 2021 8:52 PM GMT (Updated: 1 Dec 2021 8:52 PM GMT)

குடும்ப தகராறில் ஆசிரியையை, மாமனார் கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜங்களாபுரம் டேக்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (வயது 40). இவர், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களுக்கு மதுநிஷா (11) என்ற மகளும், ரோகித் (7) என்ற மகனும் உள்ளனர். முருகம்மாள் குரும்பேரி ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகம்மாள், தனது கணவரை பிரிந்து திருப்பத்தூர் அருகே கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியாக மகன், மகளுடன் வசித்து வந்தார். கடந்த 29-ந்தேதி முருகம்மாள் மகன், மகளுடன் ஜங்களாபுரம் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

அப்போது முருகம்மாள் இந்த வீடு எனக்குத்தான் சொந்தம், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று மாமனார் மணியிடம் கூறியாக கூறப்படுகிறது. இதனால் மாமனார், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். ஆனாலும் மணிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. நேற்று காலை 7.30 மணியளவில் முருகம்மாள் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆத்திரம் அடைந்த மாமனார் மணி, தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் முருகம்மாளின் கழுத்தில் பின்புறம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் கத்தியுடன் சைக்கிளில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மருமகளை வெட்டி கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story