சிலரின் தேவைகளுக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் - சசிகலா


சிலரின் தேவைகளுக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் - சசிகலா
x
தினத்தந்தி 2 Dec 2021 9:51 AM GMT (Updated: 2 Dec 2021 9:51 AM GMT)

ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் நிலை மாறும் என சசிகலா கூறி உள்ளார்.

சென்னை,

சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அ.தி.மு.க.வையும் அதன் தொண்டர்களையும் காப்பதே தமது முதல் கடமை. இந்த கொள்கையை மனதில் கொண்டுதான் தனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது.

தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அ.தி.மு.க. பயன்பட்டதில் இருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் அக்கட்சி மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் அ.தி.மு.க.வின் நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி.

ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை சரி செய்து, மீண்டும் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும்  வெளிப்படும் வகையில் விரைவில் அ.தி.மு.க.வை மாற்றிக் காட்டுவோம்.

இவ்வாறு சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story