சாலையில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை


சாலையில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Dec 2021 8:57 PM GMT (Updated: 2 Dec 2021 8:57 PM GMT)

திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரம், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ்வரன் (வயது 33). இவர், தோட்ட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

நேற்று காலை விக்னேஷ்வரன், திருவான்மியூர் சிக்னல் அருகே எல்.பி.சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் விக்னேசை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த விக்னேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோனார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

முன்பகையால் விபரீதம்

கொலையாளிகள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். விக்னேஷ் மீது அடி-தடி உள்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே முன்பகை காரணமாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.கொலையாளிகள் இருவர் பற்றி துப்பு கிடைத்து உள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் கூறினார்கள்.

திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொலையாளிகள் 4 பேர் கைது

இந்தநிைலயில் கொலையாளிகளில் ஒருவரான கோபி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் அவரது தம்பி அஜித் (25), மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட சூர்யா (26), விக்கி (21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கொலையான விக்னேஸ்வரன், கோபியின் தம்பி அஜித்தை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து, அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட கோபியையும் விக்னேஸ்வரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, அஜித் ஆகியோர் விக்னேஸ்வரனை வழிமறித்து அரிவாள் மற்றும் இரும்பு ராடால் தாக்கி தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

Next Story