மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கல் மு.க.ஸ்டாலின் அறிக்கை


மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கல் மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2021 11:51 PM GMT (Updated: 3 Dec 2021 11:51 PM GMT)

அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் - இப்போது ஆளுங்கட்சியாகவும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. “அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றக்கூடாது” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது, ஒருமனதாக ஆதரித்துள்ளோம்.

அதையும் மீறி, 2.8.2019 அன்று இந்த மசோதாவினை மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, அதில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, “அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதா என்பது அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கடும் தாக்குதல். ஆகவே, இந்த மசோதாவை திரும்பப்பெறுங்கள்” என எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உறவில் சறுக்கல்

இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது பேசிய திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்து - வலுவாக எதிர்த்து பேசி - இந்த மசோதாவை தேர்வு குழுவின் ஆய்வுக்கு அனுப்பிட வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள். தி.மு.க. சார்பில் இந்த மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா திருத்தம் கொடுத்து - அந்த திருத்தத்தின் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் திருத்தத்தை மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆதரித்த நிலையில் - தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி - அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டியதில்லை என்று முடிவு செய்து - இந்த அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பது “மத்திய-மாநில அரசுகளுக்கு” இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.

பதில் சொல்ல வேண்டிய காலம்

தி.மு.க. நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக - நாடாளுமன்ற மரபுகளுக்கோ, இவற்றை காப்பாற்றும் அரசியல் சட்டத்திற்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மத்திய பா.ஜ.க. அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story