மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Dec 2021 11:53 PM GMT (Updated: 3 Dec 2021 11:53 PM GMT)

மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந் தேதி (நேற்று) வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதை ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன், சிறந்த நிறுவனத்திற்கான விருதை விருதுநகர் மாவட்டம் சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளை, சிறந்த ஆசிரியருக்கான விருதை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக ஜெயந்தி, பார்வை குறைவுடையோருக்கு கற்பித்ததற்காக மாரியம்மாள்,

சிறந்த பணியாளர்-சுயதொழில் புரிபவர் விருதை மாதேஸ்வரன், ரேவதி மெய்யம்மை, ராஜா, தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, அப்துல்லத்தீப், அனுராதா, சரண்யா, கணேஷ் குமார், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதை முத்துச்செல்வி மற்றும் சர்மிளா, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதை ரதீஷ், நடத்துநருக்கான விருதை திருவரங்கம் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் வழங்கி பாராட்டினார். அவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அரசு மறுவாழ்வு இல்லம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்காக பரனூரில் 1971-ம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியினால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

உணவு, உறைவிடம், உடுக்க உடை, மருத்துவ வசதிகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இல்லவாசிகளுக்கு பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் 1973-ம் ஆண்டு 425 பயனாளிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டது. இதற்கான கட்டிடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இல்லவாசிகளின் நலன் கருதியும், அவர்களின் பயன்பாட்டிற்காகவும், மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்த மறுவாழ்வு இல்லத்தில் 40 பேர் தங்கும் வகையில் 20 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

பணிநியமன ஆணை

மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வை குறைவுடையோருக்கு சிறப்பு நேர்வாக நூல் கட்டுநர் பணியிடத்திற்கு 17 பேருக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்திற்கு 14 பேருக்கும், என மொத்தம் 31 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story