கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கமல்ஹாசன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!


கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கமல்ஹாசன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
x
தினத்தந்தி 4 Dec 2021 7:27 AM GMT (Updated: 4 Dec 2021 7:27 AM GMT)

'தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன்.எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என டுவீட்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கமல்ஹாசன் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

கடந்த வாரம் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். 

‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என் நலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ,மருத்துவ பணியாளர்களுக்கும் ,மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என் மகள்களுக்கும் ,ஊண் உறக்கமின்றி உடனிருந்து கவனித்துக் கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விரைந்து நலம் பெற வேண்டும் என வாழ்த்திய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள் .

என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்பு சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ் ,சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள். 

என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்பட குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும் ,விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் விரைந்து குணமடைய வேண்டும் என ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாக கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவில் இருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக கலங்கிய கண்களுக்கு நன்றி. தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி. உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Next Story