அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு


அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
x
தினத்தந்தி 4 Dec 2021 10:46 AM GMT (Updated: 4 Dec 2021 10:46 AM GMT)

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார்.  விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  2-வது நாளான இன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது.   

இதையடுத்து,  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தல் விதிகளின் படி வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை செய்யப்படும்.  புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை” என்றனர் 

Next Story